Breaking News

யாரும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வேண்டாம்: பிரதமர் ரணில் கோரிக்கை



சட்டவிரோதமான முறையில் எவரும் இலங்கையை விட்டு வெளியேற வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

  அண்மைக்காலமாக கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களில் பலர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,


"அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் கடல் மார்க்கமாகச் சென்ற பலர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


🔷 பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

பொருளாதார நெருக்கடி என்ற காரணத்தைச் சொல்லி சந்தேகநபர்களுக்கு நாட்டிலிருந்து தப்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இலங்கையிலிருந்து எவரும் சட்டவிரோதமாக வெளியேற வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொள்கின்றது.


இங்குள்ள நிலைமை அவ்வளவுக்கு மோசமடையவில்லை. பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, சட்டவிரோதமாகவும் மிகவும் ஆபத்தான வகையிலும் நாட்டிலிருந்து வெளியேற்ற முயலும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இரையாகி தமது உயிர்களையும் உடமைகளையும் பணயம் வைப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களைக் கடற்படை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதற்காகப் பயன்படுத்தப்படும் படகுகள் காலாவதியான மீன்பிடிப் படகுகள் எனவும், அவற்றின் ஊடாக சட்டவிரோதமாகக் குடிபெயர முற்படுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

No comments