Breaking News

பயணத் தடையை தளர்த்துவதில் ஏன் சிக்கல் உள்ளது? முக்கியமான தகவல்களை வெளியிட்ட ஜனாதிபதி



இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை கடந்த 14 ஆம் தேதி தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதில் மாற்றம் செய்யப்பட்டதற்கான காரணத்தை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார்.


  ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் இது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


  ஜூன் 14 ஆம் தேதி நாட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், ஜூன் 11 ஆம் தேதி, 101 இறப்புகள் பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் ஜூன் 21 ஆம் தேதி வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதன் பின்னர், குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து, ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.


இதன்போது, சில மரணங்கள் பெப்ரவரி 06 முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான 04 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. சில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


அதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


அதேவேளை ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments